கரூர் மாவட்டம் நெரூர் வடபாகம் காலனி தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. மோகன்ராஜுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், அதனை மறைத்து அந்த இளம்பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி மோகன்ராஜையும் அந்த இளம்பெண்ணையும், இளம்பெண்ணின் 17 வயது தங்கை பார்த்ததாகத் தெரிகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, 17 வயது சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமி மாயமான விவகாரத்தில் மோகன்ராஜ் மற்றும் அவருடன் பழகிய இளம்பெண் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது, சிறுமியை கொலை செய்து உடலை வாய்க்காலில் வீசியதாக மோகன்ராஜ் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெங்கமேடு - வாங்கல் சாலை பகுதியில் உள்ள வாய்க்காலில் தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் போலீசார் சுமார் 5 மணி நேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாய்க்காலில் அழுகிய நிலையில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. கரூரில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு மாயமானதாகக் கூறப்பட்ட 17 வயது சிறுமி தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.