தேனி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் 14 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை காரணமாக கோமா நிலைக்கு சென்று உயிருக்கு போராடி வருவதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். சருத்துப்பட்டியைச் சேர்ந்த நிவாஸ் குமார் கடுமையான சளி காரணமாக கடந்த மாதம் 2-ம் தேதி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுவனின் மூக்கில் வளர்ந்துள்ள சதையை அகற்ற எண்டோஸ்கோபி செய்ய வேண்டும் என்று கூறிய மருத்துவர்கள் சிகிச்சையில் சுவாசக் குழாய் வழியாகச் செலுத்தப்பட வேண்டிய டியூப் தவறுதலாக உணவுக் குழாயில் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனது மகன் கோமா நிலைக்கு சென்றதாகவும் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சிறுவனின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.