வினாத்தாள் கசிவு - சட்டத்தில் திருத்தம் செய்ய முன்மொழிவு நீட் உள்ளிட்ட வினாத்தாள்களை கசிய விட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிப்பதற்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2024ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பொதுத் தேர்வுகள் சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் தாக்கல் செய்தார். 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, வினாத்தாள் கசிவு கூட்டுச் சதியில் ஒரு கோடி ரூபாய் தொடங்கி 5 கோடி ரூபாய் வரை அபராதம், வழக்குகளை 2 மாதங்களில் விசாரித்து முடிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது போன்ற முன்மொழிவுகளுடன் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனிடையே, போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவங்களைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.