கோவையில் யாசகம் கேட்பவர்கள் போல் கும்பலாகச் சென்று அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டம் விட்டு, கட்டுமானப் பொருட்களைத் திருடிச் சென்ற வெளிமாநிலப் பெண்களை குடியிருப்புவாசிகள் மடக்கிப் பிடித்த நிலையில், அவர்கள் கூச்சலிட்டவாறே அங்கும் இங்கும் ஓடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் கடந்த 8ஆம் தேதி இந்த கும்பல், செப்பு கம்பிகள், ஏ.சி செப்பு குழாய்கள் உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றது. சிசிடிவியில் பதிவான இந்தக் கும்பல் மீண்டும் அதே பகுதிக்கு வந்ததைக் கண்டுகொண்ட குடியிருப்புவாசிகள் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது ஆளுக்கு ஒரு திசையாகத் தெறித்து ஓடினர். நீண்ட நேரம் போராடி அந்த திருட்டுக் கும்பலைப் பிடித்துக் கொடுத்தும் ஆதார் அட்டை இல்லை எனக் கூறி, போலீசார் அவர்களை விடுவித்துவிட்டதாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.