தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். திருச்சி, நெல்லை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியல், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் தொகுதியில் தொடர் மின்வெட்டு – மக்கள் மறியல் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து கிராம மக்கள் திருச்சி – மணப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்படுவதாகவும், மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். விக்கிரமசிங்கபுரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்சாரம் இல்லாததை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். மின்வெட்டுப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இசக்கி சுப்பையாவை முற்றுகையிட்டு வாக்குவாதம் இதனிடையே, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள இசக்கி சுப்பையாவையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மின்வெட்டுப் பிரச்சினை தொடர்பாக அவரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் 8 மணி நேர மின்வெட்டால் ஆத்திரமடைந்த மக்கள் திருவள்ளூர் அருகே கிராமப் பகுதிகளில் சுமார் 8 மணி நேரமாக மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊத்துக்கோட்டை – பூண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் சீமைக் கருவேல மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. “மின்வெட்டுப் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுப் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்றும், மின்னுற்பத்தி நிறுவனங்களுடன் அரசு தரப்பில் பேசி வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார்
Back to Top News
Top
September 12, 2026 at 5:36 AM
தொடர் மின்வெட்டு... பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல்!
Polimer News