73,000 புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கும் திட்டம் தொடக்கம்... பெரம்பூரில் தொடங்கி வைத்த முதல்வர் விஜய்! தமிழ்நாடு முழுவதும் 73,000 புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். தனது சொந்த தொகுதியான பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தகுதியான குடும்பங்களுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். புதிய ரேஷன் அட்டைகள் வழங்கும் இந்த முயற்சியின் மூலம், நீண்ட நாட்களாக விண்ணப்பித்து காத்திருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொது விநியோகத் திட்டத்தின் பலன்களை பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் கட்டமாக வழங்கப்படும் 73,000 ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள், மாநிலம் முழுவதும் தகுதி பெற்ற குடும்பங்களுக்கு மாவட்ட வாரியாக வழங்கப்படவுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், மக்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட சேவைகள் எந்த தாமதமும் இன்றி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும், புதிய ரேஷன் அட்டைகள் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் எளிதாக பெற முடியும் என்றும் தெரிவித்தார். பெரம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். நிகழ்வில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். நிலுவையில் இருந்த ரேஷன் அட்டை விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து, தகுதியான குடும்பங்களை பொது விநியோகத் திட்டத்தில் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், அடுத்தடுத்த கட்டங்களிலும் புதிய ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளத.