18 ஆண்டுகால பயணம் முடிவுக்கு... சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ஸ்டீபன் பிளெமிங்! சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், நீண்டகால தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் பிரிய முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகால கூட்டணிகளில் ஒன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் வீரராக சென்னை அணியில் இணைந்த ஸ்டீபன் பிளெமிங், 2009 முதல் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். கடந்த 18 ஆண்டுகளில், சென்னை அணியை உலகின் சிறந்த பிராஞ்சைஸ் அணிகளில் ஒன்றாக உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார். பிளெமிங் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றுள்ளது. மேலும், அணி சாதனை 12 முறை பிளேஆஃப்ஸுக்கு தகுதி பெற்றதுடன், 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது. இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் ரூபா குருநாத் கூறுகையில், "இந்த அணியின் அடையாளம், பார்வை மற்றும் வெற்றிக் கலாச்சாரத்தை உருவாக்கியதில் ஸ்டீபன் பிளெமிங்கின் பங்கு அளவிட முடியாதது. அவரது அர்ப்பணிப்பு, தலைமைத்துவம் மற்றும் சேவைக்காக முழு சிஎஸ்கே குடும்பமும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது. அவர் எப்போதும் எங்கள் அணியின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே இருப்பார்" என்றார். அணியின் நிர்வாக இயக்குநர் கே.எஸ். விஸ்வநாதன் கூறுகையில், "பிளெமிங் வெற்றியை மட்டுமல்ல, அணிக்கான ஒரு தனித்துவமான கலாச்சாரத்தையும் உருவாக்கினார். ஒவ்வொரு வீரரிடமிருந்தும் சிறந்த திறமையை வெளிக்கொணர்ந்த அவரது திறன், சிஎஸ்கேவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது" என்று பாராட்டினார். இதுகுறித்து ஸ்டீபன் பிளெமிங் கூறுகையில், "18 ஆண்டுகள் என்பது விளையாட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய காலம். சென்னை சூப்பர் கிங்ஸுடன் பணியாற்றியது எனது பயிற்சியாளர் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமை. மறக்க முடியாத வெற்றிகள், சவால்கள் மற்றும் நினைவுகள் அனைத்திற்கும் நான் நன்றியுடன் இருக்கிறேன். சிஎஸ்கே எப்போதும் என் இதயத்தில் தனி இடம் பிடித்திருக்கும்; இனியும் இந்த அணிக்காக நான் உற்சாகமாக குரல் கொடுப்பேன்" என்று உணர்ச்சியுடன் தெரிவித்தார்.