மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11 ஆம் வகுப்பு மாணவர் தமிழ்ச்செல்வன். செப்டம்பர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில், 7 ஆம் தேதி திங்கட்கிழமை இவரது உடல் முட்புதர் குட்டை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவர் தமிழ்ச்செல்வனும், அருகில் வசித்த 10ஆம் வகுப்பு மாணவியும் நெருக்கமாக பழகி வந்ததாகவும், இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்ச்செல்வனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ்ச்செல்வனின் பெயரை டாட்டூவாகப் போடப்போவதாக மாணவி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழ்ச்செல்வன் காணாமல் போன நிலையில், 7ஆம் தேதி ஆனையூர் கழிவுநீர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்டதால், கடிதங்கள் மற்றும் எச்சரிக்கை உள்ளிட்ட பின்னணி சம்பவங்களுக்கும் மாணவனின் மரணத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என மாணவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் உடலில் காயங்கள் இல்லை என்று இருப்பதாகவும் மாணவர் குட்டையில் தவறி விழுந்து மரணம் என தெரியவந்ததாகவும் போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வன் உடல் அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலை வழக்காக மாற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், உடலை வாங்கமாட்டோம் என 11 நாட்களுக்குமேலாக மணவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதாவது, மாணவர் தமிழ்செல்வனின் மரணத்தை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரி இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்தபோது, ஆட்சியர் அலுவலக நுழைவாசலில் ஏறி குதித்து ஓடிச்சென்று போராட்டத்தில் ஈடுபட்டதோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியவாறு தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் வரவேண்டும் என கூறி தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், கலைந்து செல்லாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர். கைது நடவடிக்கையின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தூக்கி சென்று கைது செய்த போது, தலை முடியை பிடித்து இழுத்து கைது செய்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யும்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதிலும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது மாணவர் சங்க நிர்வாகிக்கு மயக்கம் ஏற்பட்டதாக கூறி காவல்துறையிடம் சொன்னபோதும் அவரை பேருந்தில் இருந்து இறக்கி விட மறுத்த நிலையில், மீண்டும் காவல்துறையினர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவரை கீழே இறக்கிவிட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துசென்றனர். கைது நடவடிக்கையின்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என இரு தரப்பினருக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நுழைவாயில் அடைக்கப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இந்தப் போராட்டம் காரணமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த துணை ஆணையர் கார்த்திக் “மாணவர் தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குடும்பத்தினர் தரப்பில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அத்து மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்தோம்” என்றார்.
Back to Top News
Top
September 19, 2026 at 6:53 AM
குட்டையில் சிறுவன் சடலம்.. "11 நாள் ஆகியும் நோ ஆக்ஷன்".. உடலை வாங்காமல் போராட்டம்.. ஆட்சியர் அலுவகத்தில் பரபரப்பு!
Polimer News