திமுக ஆட்சி காலத்தில் மின்வாரியத்திற்கான அலுமினிய கண்டக்டர் கொள்முதலில் ஆயிரத்து 28 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 9 டெண்டர்களில் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், அதில் தொடர்புடையதாக கூறப்படும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் 3 இடங்கள், பெருங்குடியி 4 இடங்கள் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது, அவரிடம் உதவியாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படும் காசி என்பவரின் தேனாம்பேட்டை வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது. இதே போன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையின் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரில் மூன்று இடங்களில் மின்வாரிய ஒப்பந்ததாரர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருப்பூர் - காலேஜ் ரோடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்தி வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.