பழநி மலை அடிவாரத்தில் 1.40 எக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் தண்டபாணி சுவாமி மடம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் இந்த மடத்தை நிர்வாகிகள் முறையாக பராமரிக்காமல் இருந்ததால் பழனிக்கு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கவும், அன்னதானம் வழங்கவும் அந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை நிறுவப்பட்டது. தண்டபாணி சுவாமிகள் மறைவிற்குப் பிறகு அறக்கட்டளையை நிர்வாகம் செய்தவர்கள் இந்த இடம் எதற்காக கொடுக்கப்பட்டதோ அதனை மாற்றி வணிக ரீதியாக பயன்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. இதனை எடுத்துக் கூறி நீதிமன்றத்திற்கு சென்ற இந்து சமய அறநிலையத்துறை, தண்டபாணி சுவாமிகள் மடத்தின் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தற்காராக நியமிக்கப்பட்டு , தண்டபாணி சுவாமிகள் மடத்தின் இடத்தை பராமரித்து வந்தார். தற்போது அந்த இடத்தில் பழனி கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் வாகனங்களை நிறுத்திச் செல்லும் வகையில் கட்டணமில்லா வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் பழனி கோவில் கட்டுப்பாட்டில் இருந்த அந்த இடத்தை தண்டபாணி சுவாமிகள் டிரஸ்டி முருகதாஸ் சுவாமிகள் என்பவர் தனி நீதிபதியிடம் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து தனக்கு சொந்தமான நிலம் என்று ஒரு உத்தரவு பெற்று வந்தார். இதனை பயன்படுத்தி முருகதாஸ் சுவாமிகள் பழனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் வைத்து வெள்ளத்துரை, சேதுபதி என்ற இரு நபர்களுக்கு 2 கோடி ரூபாய்க்கு விற்றதும், அதனை ஒரு நாள் விடுமுறை பணிக்காக கொடைக்கானலில் இருந்து வந்த ஜஸ்டின் மணிகண்டன் என்பவர் பத்திரபதிவு செய்து கொடுத்ததும் தெரியவந்தது. இந்த முறைகேடான பத்திர பதிவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டது. இந்த பத்திர பதிவு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற முருகதாஸ் சுவாமிகள், 2 கோடி ரூபாய்க்கு நிலத்தை வாங்கியதாக கூறப்படும் வெள்ளதுரை , சேதுபதி ஆகிய இருவர் என மொத்தம் 4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த நிலத்தை முறைகேடாக விற்பதற்கு போலியான ஆவணங்களை தயார் செய்து கொடுத்ததற்காக நில புரோக்கர் ஜெயபிரகாஷ் என்பவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு நடத்தினர். போலீசாரின் விசாரணையில் உரக்கடை வைத்திருந்த ஜெயபிரகாஷ் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நில வணிகத்தில் தரகராக செயல்பட்டு கோடிகளில் கொழிப்பது தெரியவந்தது. அந்த நிலத்தை விற்பதற்கு சாட்சி கையெழுத்து போட்டதாக திமுக வட்ட செயலாளர் லட்சுமணனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர திட்டமிட்ட போலீசார். லட்சுமணனின் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பிரச்சனை பெரிதாக தொடங்கியதுமே தனக்கு உடல் நலக்கோளாறு என்று கூறி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் லட்சுமணம் சிகிச்சைக்காக சேர்ந்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு அவர் சாட்சி கையெழுத்து போட்டதாக கூறப்படும் நிலையில் இந்த நிலத்துக்காண பத்திரபதிவில் விஐ பி அரசியல் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் அவர் இதே போல பல மதிப்புள்ள நிலங்களை பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பயன்படுத்தி தன் வசப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணை நீளும் பட்சத்தில் 100 கோடி ரூபாய் நில விவகாரத்தில் அவர் வசமாக சிக்குவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.