வீட்டின் உரிமையாளருக்கு அதிர்ச்சி..! கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் இருவரும் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதையடுத்து பீரோவில் இருந்த நகைகளை சோதனை செய்தபோது, 3 வகையான ஆரங்கள், 2 வகையான நெக்லஸ்கள் என மொத்தம் 21 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், 9,800 ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளையடித்தது யார்? முதற்கட்ட விசாரணையில், செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு சாவியை மீட்டர் பாக்ஸ் அருகிலும், பீரோ சாவியை பீரோவின் அருகிலும் வைத்து சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீதர் கைரேகை வைத்து உடனே குற்றவாளி யார் என்பதை சுட்டிக்காட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, வீட்டில் கொள்ளையடித்த பெண் சாலையில் நடந்து சென்ற காட்சியும் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு அந்த பெண்ணை கைது செய்தனர். விசாரணையில் அந்த நபர், கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருவத்தை சேர்ந்த ஷம்ஷத் என்கிற மரியம் பிவி (36) என்பதும், இவர் 10க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. போலீசார், மரியம் பிவியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் பல சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார். சிறையில் தோழியை பார்க்க சென்றபோது கொள்ளை சம்பவம்..! மரியம் பிவியும், சிந்து என்ற பெண்ணும் தொடர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் சிந்து சமீபத்தில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது தோழி சிந்துவை பார்ப்பதற்காக சிறைக்கு சென்ற மரியம் பிவி, சிந்துவை சிறையில் சந்தித்து விட்டு வெளியில் நடந்து வந்து கொண்டிருந்த போது சிறை அருகிலேயே உள்ள செல்வராஜ் வீட்டை கண்காணித்துள்ளார். பின்னர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மரியம் பிவி செல்வராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டின் சாவி மீட்டர் பாக்ஸ் அருகிலேயே இருந்ததை பார்த்த மரியம் பிவி, கதவை திறந்து உள்ளே நுழைந்துள்ளார். பின்னர், பீரோ சாவியும் பீரோ அருகிலேயே வைக்கப்பட்டிருந்ததால் பீரோவை திறந்து அவசர அவரசமாக நகை பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். மேலும் அதே பீரோவில் மற்றொரு பகுதியில் 25 பவுன் நகை இருந்ததை அவர் பார்க்காததால், அந்த நகைகள் தப்பியது. இந்த நிலையில் மரியம் பிவி, பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்பில் இருப்பதால் இவருடைய கைரேகையை உடனடியாக குற்றவாளிகளின் கைரேகை பட்டியலோடு ஒப்பிட்டு, மரியம் பிவியை போலீசார் கைது செய்தனர். மக்களே உஷார்..! வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்பவர்கள் சாவியை திருடர்களுக்கு ஏதுவாக அருகிலேயே, அல்லது எளிதாக கண்டுபிடிக்கும்படி வைத்துவிட்டு செல்ல வேண்டாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.