சென்னை அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் தொடர்பாக தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இடையே கடும் விவாதம் ஏற்பட்டுள்ளது. விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், இதனால் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் தாக்கம், நிலம் கையகப்படுத்தல் மற்றும் திட்டத்தின் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்து இரு தரப்பினரும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளனர். “முதலீட்டாளர்கள் தவறாக நினைக்க மாட்டார்களா?” – ஆஸ்டின் திமுகவைச் சேர்ந்த நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார். புதிய விமான நிலையம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், திட்டம் ரத்து செய்யப்பட்டால் முதலீட்டாளர்கள் தமிழகத்தைப் பற்றி தவறாக நினைக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சியில் சுமார் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆஸ்டின் கூறியுள்ளார். “விவசாயிகள் பக்கம் முதலமைச்சர் விஜய் நிற்பார்” – ஆதவ் அர்ஜுனா இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, விவசாயிகள் பக்கமே முதலமைச்சர் விஜய் எப்போதும் நிற்பார் என தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் புதிய விமான நிலையத்திற்கான இடம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், விமான நிலையத் திட்டம் இல்லையென்றால் தமிழகத்திற்கு முதலீடுகள் வராது என திமுக தரப்பில் கூறப்படுவதாக விமர்சித்த அவர், ஊழல் இல்லாத அமைச்சர், முதலமைச்சர் மற்றும் அரசு இருந்தால் முதலீடுகள் தானாகவே வரும் என தெரிவித்துள்ளார். தொழில் நிறுவனங்களுக்கு 45 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அரசுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று என்றும், ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் பரந்தூரில் நிலங்களை வாங்கி மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ரியல் எஸ்டேட் நலனுக்காகவே பரந்தூர் விமான நிலையத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். “கையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?” – எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பரந்தூர் விமான நிலையத்திற்காக 5,740 ஏக்கர் நிலம் தேவை என கூறப்பட்டதாகவும், அதில் 90 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார். திட்டம் கைவிடப்பட்டால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் என்றும், அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப் போகிறீர்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “90 சதவீத நிலம் கையகப்படுத்தப்படவில்லை” – நிர்மல் குமார் இதனிடையே, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பரந்தூர் விமான நிலையத்திற்காக 5,846 ஏக்கர் நிலம் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதில் பட்டா நிலங்கள் 3,774 ஏக்கர், வேளாண் நிலங்கள் 2,681 ஏக்கர், அரசு நிலங்கள் 1,972 ஏக்கர் என்றும், 1,558 ஏக்கர் நீர்நிலைகளுடன் தொடர்புடைய நிலங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் எனக் கூறிய அவர், 1,802 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏகனாபுரம், தண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை விமான நிலையம் விரைவில் ஆண்டுக்கு 5.50 கோடி பயணிகளை கையாளும் திறனைப் பெற உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு கூட பெறப்படவில்லை என்றும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். ஜி-ஸ்கொயர் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், குறிப்பிட்ட சிலரின் நலனுக்காகவே இந்த விவகாரம் தொடர்பாக அழுத்தம் கொடுக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். “எந்த லாட்டரி மருமகனுக்காக புது விமான நிலையம்?” – தங்கம் தென்னரசு முன்னாள் அமைச்சரும் திமுகவைச் சேர்ந்தவருமான தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் விவாதத்தில், “எந்த லாட்டரி மருமகனுக்காக புது விமான நிலையம்?” என கேள்வி எழுப்பி ஆவேசமாக விமர்சித்துள்ளார். இதன் மூலம், விமான நிலையத் திட்டத்தின் பின்னணியில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் நோக்கங்கள் குறித்து ஆளும் தரப்பிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்; நான் ரெடி” – ஆதவ் அர்ஜுனா இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்படும் எந்த கேள்விக்கும் பதிலளிக்கத் தயாராக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக நிலம் கையகப்படுத்தல், சுற்றுச்சூழல் அனுமதி, முதலீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் குற்றச்சாட்டுகள் என பல்வேறு கோணங்களில் அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்து வருவதால், இந்த விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
Back to Top News
Top
August 25, 2026 at 8:30 AM
ஜி-ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்... சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம்..!
Polimer News