மது பழக்கத்தால் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காக்கவும், பொது அமைதியைப் பேணவும், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி ஊர் பஞ்சாயத்து சார்பில் மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம் என்ற முழக்கத்துடன் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. கிராமத்தின் சுகாதாரம் மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு திருமணம் ஆகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது, இதை மீறினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருமணமானவர்கள் குடித்துவிட்டு வீட்டிலோ அல்லது பொது இடங்களிலோ தகராறு செய்து புகார் வந்தால் அவர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்துபவர்கள் குறித்து ஊர் தலைவர்களிடம் ஆதாரம் தரும் நபர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.