தாராபுரத்தைச் சேர்ந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த ஆண்டு கூலிப்படையை ஏவி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகானந்தத்தை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக,அவரது சித்தப்பாவும், தேன்மலர் மெட்ரிக் பள்ளி தாளாளருமான தண்டபாணி உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். 28 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தண்டபாணி உள்ளிட்ட சிலர் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான தாராபுரம் கணபதி பாளையத்தைச் சேர்ந்த கடலை மில் உரிமையாளர் தங்கவேல் என்பவரை கேரளாவைச் சேர்ந்த மூன்று பேர் கும்பல் கடந்த வாரம் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்ய முயன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மில் அதிபர் தங்கவேல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை முயற்சி வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், தண்டபாணியின் மனைவி சரஸ்வதி, உறவினர் நந்தகுமார்,சேலம் ஹேமா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிறையில் உள்ள தண்டபாணியின் தூண்டுதலில் பேரில் இந்த கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அடிப்படையில் கூலிப்படையை ஒருங்கிணைத்து கொடுப்பதில் மூளையாக செயல்பட்டதாக நெல்லை எஸ்.ஐ. சரவணனை நள்ளிரவில் கைது செய்தனர். வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கின் முக்கிய நேரடி சாட்சிகளை மட்டுமல்லாமல், முருகானந்தத்தின் தாயார் சுமித்ரா மற்றும் அவரது உறவினர்களையும் கொலை செய்யும் நோக்கில், மேலும் இரண்டு கூலிப்படையினரையும் தயார் செய்து வைத்திருந்ததாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐடி ஊழியர் கவின் கொலை வழக்கில் மகன் சுர்ஜித்துடன் கைது செய்யப்பட்டு எஸ்.ஐ. சரவணன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது தண்டபாணியுடனும், பல்வேறு ரவுடிகளுடனும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சிறையில் இருந்து வெளியே வந்ததும், இதனை பயன் படுத்தி தமிழ்நாடு, கேரளா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கூலிப்படையினரை WhatsApp குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்த எஸ்.ஐ.சரவணன், தேவைக்கேற்ப செயல்படக்கூடிய பெரிய கூலிப்படை நெட்வொர்க்கையே உருவாக்கியிருந்ததாகவும், அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக அவரே செயல்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஒப்பந்தக் கொலைக்கும் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கும் சரவணன், அந்த பணத்தை குழுவினருக்கு பிரித்து வழங்கும் பொறுப்பையும் அவரே மேற்கொண்டதாக தெரிவித்த போலீசார், தண்டபாணிக்காக மில் அதிபரை கொலை செய்ய கூலிப்படை ஏவியதாக சரவணனை கைது செய்திருப்பதாக தெரிவித்தனர். கவின் கொலை வழக்கில் பாளை சிறையில் அடைக்கப்பட்ட சரவணனுக்கு கடந்த ஜூன் 2026-இல் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. வெளியில் வந்ததும் தன்னுடைய ரவுடி நண்பர்களை ஒருங்கிணத்தது கூலிப்படைகளை உருவாக்கியதாக கூறப்படுகின்றது. இவருடன் தொடர்புடைய கூலிப்படை கும்பலை கூண்டோடு கைது செய்ய விரிவான நடவடிக்கைகளை குற்றபுலனாய்வு போலீசார் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.