தேனி மாவட்டம் வருஷநாடு, மேகமலை வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடமலைக்குண்டு பகுதியில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2021-ஆம் ஆண்டு, மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிகளை இணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி, இங்கு மனித நடமாட்டமோ, விவசாயமோ,குடியிருப்புகளோ இருக்கக் கூடாது என்பது விதியாகும். இதனையடுத்து, இங்கு சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருந்த ரிசார்ட்டுகள், வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, அங்கு வசித்த மக்களையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி வெளியேற்றப்படும் மக்களுக்கு குடியிருப்புப் பகுதிகளில் 2 செண்ட் நிலம் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோதிலும் அதனை ஏற்காமல் அம்மக்கள் போராடி வருகின்றனர்.