இந்தியாவின் தலைமையில் நடைபெறும் BRICS உச்சிமாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். போர், வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, மேற்காசிய மோதல் மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் சூழல் குறித்தும் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், ஹோர்மூஸ் நீரிணையில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் தொடர்பான சவால்கள் குறித்தும் விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகத் தலைவர்களை வரவேற்கும் பிரதமர் மோடி BRICS உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்று வருகிறார். பாரத் மண்டபத்தில் ராமேஸ்வரம் கோவில் பிராகாரத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ள பின்னணியில் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்டோரும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். ராமேஸ்வரம் கோவில் குறித்து விளக்கம் ராமேஸ்வரம் கோவில் பிராகாரத்தின் புகைப்படத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அதன் சிறப்புகள் மற்றும் பெருமைகள் குறித்து உலகத் தலைவர்களுக்கு விளக்கினார். முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பிரதமர் மோடி, திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை அவருக்கு பரிசாக வழங்கினார். இரண்டு நாட்கள் நடைபெறும் BRICS உச்சிமாநாட்டில், உலகளாவிய பொருளாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன.
Back to Top News
Top
September 12, 2026 at 9:28 AM
டெல்லியில் தொடங்கியது BRICS உச்சிமாநாடு: உலகத் தலைவர்கள் பங்கேற்பு
Polimer News