டாஸ்மாக் பணியாளர்கள் பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகமாக வசூலிப்பதற்கு அவர்களது சம்பளம் குறைவாக இருப்பது தான் காரணம் எனக்கூறி 23 வருடங்களுக்கு மேல் பணியில் இருக்கும் பணியாளர்களுக்கு இரு மடங்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது தமிழக அரசு. பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இனி பாட்டிலுக்கு கூடுதலாக 1 ரூபாய் வசூலித்தாலும் முதலில் 3 மாதங்களுக்கு பணியிடை நீக்கம் என்றும், 2 வது முறையாக பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்து சிக்கினால் பணி நீக்கம் செய்யப்படுவர் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் சென்னை மேடவாக்கம்பகுதியில் செயல்பட்டுவரும் அரசு டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையை விட பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வருவதாக குடிமகன்கள் வேதனை தெரிவித்தனர். மதுப்பிரியர்கள் செய்தியாளர்களிடம் புகார் தெரிவிப்பதை கண்டு காண்டான மதுக்கடை ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படம்பிடிப்பதை பார்த்ததும் கூடுதலாக வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுத்த நிகழ்வுகளும் அரங்கேறியது. விழுப்புரம் மாவட்டம் திருப்பச்சாவடிமேடு பகுதியில் செயல்படும் மதுபானக்கடையில் பாட்டிலுக்கு கூடுதலாக 5 ரூபாய் முதல் 10 ருபாய் வரை வசூலிப்பதாக மதுப்பிரியர்கள் குற்றஞ்சாட்டினர். காஞ்சிபுரம் வெள்ளைகேட்பகுதியில் 4408 கடையில் வழக்கம் போல் பத்துரூபாய் கூடுதலாக விற்பதாகவும் மீறிகேள்வி கேட்டால் நீங்கள் வாங்கவேண்டாம் வெளியேறுங்கள் என்று திட்டுவதாக குற்றச்சாட்டினர். திருப்பத்தூரில் பாட்டிலுக்கு 5 ரூபாய் வாங்கிய ஊழியர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதற்கு பின்னர் வாங்க மாட்டோம் என்று சமாளித்தார். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவதாக தெரிவித்த மதுப்பிரியர், பிளாக்கில் 250 ரூபாய்க்கு மது விற்கப்படுவதாக புகார் தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 15 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக தெரிவித்தனர். திருவள்ளூர் அருகே தலக்காஞ்சேரி சுடுகாடு பகுதியில் உள்ள அரசு மதுபானகடையில் பாட்டிலை திருப்பி கொடுத்தால் 10 ரூபாய் திருப்பி தருவதாக ஸ்டிக்கர் ஒட்டி, கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரியில் பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதலாக வசூலிப்பது தொடர்வதாக புகார் தெரிவித்தனர். அதே நேரத்தில் மதுரையில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பாட்டிலில் உள்ள விலையே வசூலிக்கப்பட்டதாகவும், தமிழக அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும் செல்லூரை சேர்ந்த மதுப்பிரியர் தெரிவித்தார். கோவையில் டாஸ்மாக் கடையில் சரியான விலையில், விற்பதாகவும் , ஒரே நிறுவன சரக்கு தான் கிடைக்குது என்று மதுப்பிரியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
Back to Top News
Top
September 2, 2026 at 5:19 AM
அவனுங்க இன்னும் திருந்தல.. பாட்டிலுக்கு ரூ .5 டூ ரூ.15 வசூல்..! என்ன நடவடிக்கை எடுப்பாங்க? டபுள் தீபாவளிக்கு தயாராகுறாங்க..!
Polimer News