சென்னையில் சொத்து வரி உயர்ந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து சொத்து உரிமையாளர்களின் புகார்கள் குறித்து சரிபார்க்க மூன்று இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. ஷெனாய் நகரில் வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நடந்த முகாமில் புகார் அளிக்க வந்த சொத்து உரிமையாளர்கள் அதிகாரிகள் சொன்ன காரணத்தை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி உயர்த்தப்படவில்லை என விளக்கம் அளித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி, 3 லட்சத்து 49 ஆயிரம் சொத்து உரிமையாளர்களுக்கு மறுமதிப்பீடு நோட்டீஸ் அனுப்பியுள்ளதுதாக தெரிவித்துள்ளது. மறுமதிப்பீடு நோட்டீஸ் அனுப்பட்ட சொத்துக்களை இதுவரை முறையாக வரையறுக்காமல் குறைவான வரி விதிக்கப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு ஒரு தளம் கொண்ட வீட்டிற்கு வரி செலுத்தி வந்தவர், அதன் பிறகு தனது வீட்டை இரு தளங்கள் கொண்ட வீடாக கட்டுமானத்தை விரிவாக்கம் செய்த பின்னர் மறுமதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் முதல் தளத்திற்கு மட்டுமே வரி செலுத்தி வந்த நிலையில், தற்போது முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விடுபட்ட சொத்துக்களுக்கும் சேர்த்து வரி விதித்திருப்பதாகவும், இது வரி உயர்வு இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது ட்ரோன் மூலமும், GIS சர்வேக்கள், செயற்கைக்கோள் தரவுகள், மின்சார வாரியம் மற்றும் உரிமையாளர்களின் சுயவிவரங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு தவறுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதாரணமாக, சொத்துக்கள் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை தொழில்நுட்ப ரீதியாகச் சொத்துக்கள் மறுவரையறை செய்து நியாயமான வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.