சென்னை பெரம்பூரில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருபவர் ராஜ். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவரது மகன் ஷாம் (20) இயந்திரத்தில் ஜூஸ் பிழியும் போது எதிர்பாராத விதமாக அவரது இடது கையில் விரல்கள் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது. இதில் அவருக்கு 3 விரல்கள் காயம் அடிந்ததாகவும்,1 விரல் நசுங்கி சிதைந்ததாகவும் கூறப்படுகின்றது. இதனை அடுத்து முதல் உதவி சிகிச்சை அளித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். முதலில் சாதாரண காயம் தான் சரி செய்து விடலாம் சென்று கட்டுப்போட்ட மருத்துவர்கள் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். 27ந்தேதி மதியம் 2 மணி அளவில் அறுவை சிகிச்சை செய்வதற்கு அழைத்து சென்ற மருத்துவமனை நிர்வாகம் 28 ந்தேதி அதிகாலை ஷியாம் சுயநினைவை இழந்ததாக தெரிவித்து உள்ளது. ஆபரேசன் தியேட்டரை விட்டு வெளியே வந்த சில நிமிடங்களில் ஷாம் உயிரிழந்து விட்டதாகவும், அவரது உயிரிழப்புக்கு அதீத காய்ச்சலும், கிட்னி பெயிலியரானதும் காரணம் என்றும் இது லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய ஜெனிடிக் பிரச்சனை என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்ததாக கூறப்படுகின்றது. மருத்துவர்களின் விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறி சியாமின் சடலத்தை வாங்க மறுத்த பெற்றோர் , தங்கள் வீட்டு பிள்ளை சவீதா மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர். சவீதா அறுவை சிகிச்சை மருத்துவர் சூர்யா ராவ் அளித்துள்ள டிஸ்சார்ஜ் சம்மரியில், சியாமுக்கு முழுமையாக மயக்க மருத்து கொடுக்கப்பட்டு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் சுய நினைவுடன் இருந்ததாகவும், ஆபரேசன் தியேட்டரில் இருந்து வெளியே வந்த சில நிமிடங்களில் அதீத காய்ச்சல் ஏற்பட்டதோடு, அவரது பிபியும் அதீதமாக உயர்ந்ததால் சியாம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்ட போது சியாமுக்கு, பிபி அளவு பரிசோதித்த விவரங்கள் ஏதும் இடம் பெற வில்லை. மருத்துவர்கள் அளித்த டிஸ்சார்ஜ் சம்மரியை படித்துப்பார்த்த விவரமான உறவினர்கள் சிலர், முழுக்க முழுக்க மயக்கவியல் மருத்துவரின் மெத்தனத்தால் சியாம் உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டினர். கைவிரல்களில் அறுவை சிகிச்சை என்றால் கை மட்டும் மறத்து போகும் அளவுக்கான மயக்க மருந்து செலுத்தினால் போதுமானது. ஆனால் அதை விடுத்து உடல் முழுவதற்கும் சேர்த்து அளவுக்கதிகமான மயக்க மருந்து ஊசி மூலம் செலுத்தப்பட்டதால் இந்த உயிரிழப்பு நிகழ்ந்திருப்பது அப்பட்டமாக தெரிவதாக குற்றஞ்சாட்டினர். சியாம் உடன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களும் உறவினர்களுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஸ்ரீபெரும்புதூர் டிஎஸ்பி தலைமையில் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் இளைஞர் சியாமின் சடலத்தை பிணகூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சவீதா மருத்துவமனை மருத்துவர்களின் தவறால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்று பிணக்கூறாய்வில் உறுதிபடுத்தப்பட்டால் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களுக்கு போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Back to Top News
Top
July 29, 2026 at 5:59 AM
சவீதா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு நடந்து சென்றவர் சடலமாக வெளியே வந்த சோகம்..! இப்படி ஒரு அலட்சியமா.. உறவினர்கள் ஆவேசம்..!
Polimer News