மதுரையில் உள்ள செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்தவர் ராஜாராம். மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் சுமைத் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் இவருக்கு பிரேமா என்ற மனைவியும், இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். 2021-ம் ஆண்டு, மூத்த மகளின் திருமணச் செலவுக்காக, சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்த கலையரசி என்பவரிடம் பிரேமா 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அந்தக் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு கலையரசி தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. வாங்கிய கடனுக்கு வட்டி கொடுப்பதற்காக திருப்பதி, பகவதி, அங்கம்மாள் உள்ளிட்ட பலரிடமும் பிரேமா கூடுதல் கடன் வாங்கிய நிலையில், அவர்களும் வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 13-ஆம் தேதி புது மண்டபம் அருகே பிரேமாவை நேரில் வரவழைத்து, தகாத வார்த்தைகளால் திட்டி, வட்டித் தொகையை உடனடியாக தராவிட்டால் ஆடையைக் கழற்றி விடுவோம் என்றும் உயிருடன் விடமாட்டோம் எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பிரேமா, வீட்டில் இருந்த மூட்டைப் பூச்சி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, பிரேமாவின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் ராஜாஜி மருத்துவமனை உள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலையச் செய்தனர். மேலும் பிரேமாவின் கணவர் ராஜாராம் அளித்த புகாரின் பேரில் கலையரசி, திருப்பதி, பகவதி மற்றும் அங்கம்மாள் ஆகிய 4 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விளக்குத் தூண் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 லட்சம் ரூபாய் கடனுக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டு டார்ச்சர் செய்ததாக பிரேமாவின் கணவர் ராஜாராம் புகார் கூறியுள்ளார். திருப்பதி போன்றவர்களிடம் 4 சதவீத வட்டிக்கு பணம் வாங்கி அதை கலையரசியிடம் பிரேமா கொடுத்ததாகவும், கஷ்டப்பட்டு உழைத்த பணத்தையெல்லாம் வட்டியாக கட்டியும், ஆபாசமாகப் பேசியதால் மனம் உடைந்து தனது மனைவி உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.