மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி கிராமத்தில் 19 வயது கொத்தனார் பார்த்திபன்,16 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையிலொ சடலமாக கிடந்தனர். காதல் விவகாரம் தொடர்பாக இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சாதியை சொல்லி திட்டி கொத்தனார் அடித்துக் கொல்லப்பட்டதாக கொத்தனாரின் உறவினர்கள் மற்றும் விசிகவினர் முன்னெடுத்த போராட்டத்துக்கு பணிந்து சிறுமியின் தந்தை உள்ளிட்ட 5 பேர் பிசி ஆர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டை கொத்தனாரின் உறவினர்கள் தாக்கி சூறையாடியதாலும், அவர்களின் மிரட்டல் தொடர்வதாலும் ஊருக்குள் செல்ல முடியாமல் தவித்து வருவதாக சிறுமியின் தாயார் பரபரப்பு குற்றஞ்சாட்டை தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மாவீரன் வன்னியர் சங்கம் என்ற அமைப்பின் தலைவர் வி.ஜி.கே. மணி மற்றும் திரைப்பட இயக்குனர் மோகன் ஜீ தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். 5 பேர் மீது பதியப்பட்ட பொய்யான பிசி ஆர் வழக்கை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அந்த அமைப்பினருக்கும் போலீசாருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலக கேட்டை இழுத்து பூட்டிய போலீசார், அவர்களை உள்ளே செல்லவிடமால் தடுத்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் குறிப்பிட்ட 10 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விட்டு வெளியே வந்த சிறுமியின் தாய் கூறும் போது, மகளை பறிகொடுத்து விட்டு தவித்து நிற்கும் நிலையில் கணவர் மீதே பொய்யான வழக்கு போட்டு கைது செய்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தார். தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட கும்பல் ஒன்று இது போன்ற விவகாரங்களில் சாதியை வைத்து அரசியல் செய்வதாகவும், இதற்கு விசிக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளில் சிலர் துணை இருப்பதாகவும் குற்றஞ்சாட்டிய வி.ஜி.கே மணி, பொய்யான புகாரின் பேரில் பதியப்பட்ட சாதிய வன்கொடுமை வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும்பரபரப்பு நிலவியது.