ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. தப்ரிஸ் (Tabriz), புஷெர் (Bushehr), பெபஹான் (Behbahan), ஒமீதியே (Omidiyeh), சிரிக் (Sirik) உள்ளிட்ட நகரங்களில் உள்ள தளங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவத் தளங்கள் தவிர, கடல்சார் கட்டமைப்புகள், போர் விமானங்கள் நிறுத்துமிடங்கள், ட்ரோன் மற்றும் ராணுவத் தளவாட சேமிப்புக் கிடங்குகள் மீதும் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே, நாடன்ஸ் யுரேனியம் செறிவூட்டும் மையம் அருகே தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான போரை மேலும் நீட்டிக்கவே செய்யும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், ஈரான் தாக்குதலில் இதுவரை உயிரிழந்த போர் வீரர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.