திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான சுமார் 50 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் என்பவர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் துணையின்றி இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றிருக்காது என அமைச்சர் ரமேஷ் இது குறித்து விமர்சித்துள்ளார். தி.மு.க. பகுதிச் செயலாளர் ராம்குமாரின் மனைவி அப்பகுதியின் வார்டு கவுன்சிலராக உள்ள நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு நிலத்தை அபகரித்து அங்கு தி.மு.க அலுவலகத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட நிலத்தை வேறு யாருக்கும் விற்கவோ மறுபதிவு செய்யவோ கூடாது என அறநிலையத்துறை சார்பில் சார் பதிவாளருக்கு அவசரக் கடிதம் அனுப்பப்பட்டு, சொத்து முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே பட்டா நிலத்தையே தான் முறையாக பத்திரப்பதிவு செய்து பயன்படுத்தி வருவதாக தி.மு.க. பிரமுகர் ராம்குமார் விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், மோசடி நடந்தது எப்படி? என்பதை ஆவணங்களை காண்பித்து விளக்கமளித்தார். நில அபகரிப்பு நடந்தது எப்படி? - அமைச்சர் ரமேஷ் விளக்கம். ஸ்ரீரங்கம் கோவில் நிலத்தை தி.மு.க நிர்வாகி ஆக்கிரமித்து, அதனையே திமுக அலுவலகமாக நடத்தி வருவதாக நிறைய பேர் புகார் அளித்துள்ளனர். புகார்கள் பற்றி விசாரித்து பார்க்கும் போது, மிகப்பெரிய அளவில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ''1866ல் 329 ஏக்கர் நிலங்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்று ஒரு சொத்துரிமைப் பத்திரம் ஏற்கனவே கொடுத்திருக்கிறார்கள்'' சொத்துரிமை பத்திரம் 1027 என்ற எண் கொண்ட ஆவணத்தில் 329 ஏக்கர், பல்வேறு சர்வே நம்பரில் உள்ள நிலம் கோவிலுக்கு சொந்தமானது என கொடுத்து இருக்கிறார்கள். 1910ஆம் ஆண்டு இனாம் கமிஷனரும் கோவில் சொத்து என்பதை உறுதி செய்துள்ளார். தி.மு.க. பகுதிச் செயலாளர் சட்டவிரோதமாக பெயர் மாற்றம் செய்து திமுக அலுவலகம் உள்ள நிலத்தின் சர்வே எண்ணும் கோவில் நில வகைபாட்டில் உள்ளது. 2020ல் தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன், கோவில் நிர்வாகம் சார்பில், சொத்துரிமை பத்திரம் 1027க்கு கீழ் வரும் நிலங்கள் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமானது இந்த நிலங்களை அறநிலைத்துறையின் அனுமதியின்றி விற்கவோ, வாங்கவோ கூடாது என்று பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம். தெளிவான ஆவணங்கள் இருந்தும், போல ஆவணங்களைத் தயாரித்து, அதை வைத்து தி.மு.க. பகுதி செயலாளர், இந்த நிலத்தை பெயர் மாற்றம் செய்துள்ளார். கோவில் நிலம் என்பதை மறைத்து தனியாருக்கு சொந்தமான நிலம் என்று கூறியுள்ளனர் மூலப்பத்திரம் காணவில்லை என்று புதுச்சேரியில் புகார் அளித்து, அதில் கிடைத்த சான்றை வைத்து பத்திரப்பதிவு நடந்துள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் தான் திமுக அலுவலகம் அமைந்துள்ளது; அங்கு தான் சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகள் நடந்து வந்தன. வருவாய்த்துறை, அறநிலையத்துறை, பத்திரப்பதிவுத்துறை என இத்தனை துறைகளை ஏமாற்றி சாதாரண தி.மு.க. பகுதிச் செயலாளரால் எப்படி பத்திரப்பதிவு செய்திருக்க முடியும்? அன்று இருந்த அறநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகளுக்கு தெரியாமல் எப்படி உடனடியாக பத்திரப்பதிவு செய்ய முடிந்தது?. சட்டசபையில் வாய் கிழிய 'சிவன் சொத்து குல நாசம்' என்று பேசலாம். அப்புறம் எப்படி பெருமாள் சொத்தை சொந்த கட்சிக்காரனுக்கு கொடுத்து விடலாமா?. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கோவில் சொத்தை மீட்டோம், எங்களை மாதிரி யாராலும் மீட்க முடியாது என வசனம் பேசினார்கள்; இதுதான் மீட்ட லட்சணமா? என கேள்வி
Back to Top News
Top
September 20, 2026 at 5:15 AM
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் அபகரிப்பு என புகார்
Polimer News