சென்னையில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தவெக சார்பில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் அருண்ராஜ் ஆகியோர் நேரில் சென்று திருமாவளவனை சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். இதனிடையே, தவெகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம் கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தபடியே அவர் அங்கிருந்து கடந்து சென்று காரில் புறப்பட்டார். தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்திற்காக விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த பின்னர், மீண்டும் தவெக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதாக ஆதவ் அர்ஜூனா பதிலளித்தார். பிரதமர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் திருமாவளவனிடம் கேட்டபோது, 9ஆம் தேதிக்குப் பிறகு பேசலாம் என்றும் அவர் தெரிவித்தார்.