திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரத்தினத்தின் மனைவி தமிழ்க்கொடி (68), சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்க்கொடிக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் வார்டுக்குள் புகுந்த எலிகள், படுக்கையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த தமிழ்க்கொடியின் கட்டுப்போடப்பட்ட காயம் இருந்த காலின் விரல்களை கடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், எலிகள் கடித்ததை தமிழ்க்கொடி உடனடியாக உணரவில்லை. அருகில் இருந்த நோயாளிகள் தெரிவித்த பிறகே சம்பவம் குறித்து அவருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தமிழ்க்கொடியின் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார்.