கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற 1191 பதிவெண் கொண்ட 8 ஆம் நம்பர் அரசு பேருந்து, காலை 9 மணி அளவில் ரங்கம்மாள் சத்திரம் காலணியில் பயணிகளை ஏற்ற நின்றது. ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் அந்த அரசுப் பேருந்தில் புத்தகப்பையோடு ஏறியுள்ளனர். சாலையில் விழுந்த மாணவிகள்..! பேருந்து புறப்பட்டதும் தானியங்கி கதவை பேருந்து ஓட்டுனர் மணிகண்டன் மூடியுள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக 10க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கட்டு பகுதியில் புத்தகப்பை அணிந்தபடி நின்றுள்ளனர். பேருந்து ரங்கம்மாள் சத்திரம் காலணி நிலையத்தில் இருந்து 50 அடி தூரம் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தானியங்கி கதவு திறந்ததால், படியில் நின்ற 10க்கும் மேற்பட்ட மாணவிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. சாலையில் விழுந்த மாணவிகளுக்கு கால் மற்றும் தலைப்பகுதிகளில் காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் வலி தாங்க முடியாமல் துடித்த காட்சிகள் காண்போரை கலங்க வைத்தது. மருத்துவமனையில் சிகிச்சை..! இதனைக் கண்டு பதறிய பேருந்தில் பயணித்த பயணிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், காயம் அடைந்த மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்த மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டிய உறவினர்கள்..! இந்த சம்பவம் குறித்து பேசிய மாணவிகளின் உறவினர், தங்கள் பிள்ளைகள் எப்போதும் பேருந்தில் தொங்கியபடி தான் பேருந்தில் பயணிக்கும் சூழல் உள்ளதாகவும், ஓட்டுனரும் நடத்துனரும் பேருந்தில் ஏறிவிட்டார்களா? என்பதை கவனிப்பதே இல்லை என குற்றஞ்சாட்டினார். ஓட்டுநர் கட்டுப்பாட்டில் தான் தானியங்கி கதவை இயக்கும் பட்டன் இருக்கும், கதவு திறப்பதை சரிபார்க்கும் பொறுப்பு நடத்துனருடையது, இருவரும் தான் இதற்கு பொறுப்பு என காயமடைந்த மாணவியின் உறவினர் தெரிவித்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, சம்பவ இடத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஓட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம்..! எமது செய்தியாளர், அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் கார்த்திகேயனை போனில் தொடர்புகொண்டு கேட்டபோது, சம்மந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் அர்ஜுனன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். பொத்தானை ஓட்டுநர் அழுத்தவில்லை - போக்குவரத்து துறை நிர்வாகி..! பேருந்து ஓட்டுநர் அர்ஜுனன் எதற்காக பேருந்து சென்று கொண்டிருக்கும் போதே, கதவை திறக்கும் பட்டனை அழுத்தினார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, கூட்ட நெரிசல் காரணமாக உள்ளே நின்ற பயணி ஒருவர் முன் படிக்கட்டின் அருகில் உள்ள அவசர கதவு திறக்கும் பொத்தானை அழுத்தியதால் பேருந்தின் முன் படிக்கட்டு திறந்து படியில் நின்ற மாணவ மாணவிகள் சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகவும், பொத்தானை ஓட்டுநர் அழுத்தவில்லை எனவும் அரசு போக்குவரத்து துறை பொது மேலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென திறக்கப்பட்டதால், மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.