மதுரவாயல், பல்லவன் நகரில் கமலகண்ணன் என்பவர் சிறிய அளவில் பல் மருத்துவமனை நடத்தி வருகின்றார். அந்த கட்டிடத்தில் ஏற்கனவே ஒரு வீட்டின் ஏ/சி அவுட்டோர் யூனிட்டை மர்ம நபர்கள் களவாடிச்சென்றதால் அந்த கட்டிடத்தில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ளனர். சரியாக ஒரு வாரம் கழித்து அதே கட்டிடத்தில் உள்ள பல் மருத்துவமனையில் ஏ/சி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து மெக்கானிக்கிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மெக்கானிக் வந்து பார்த்த போது அந்த அவுட்டோர் யூனிட்டில் பொறுத்தப்பட்டிருந்த காப்பர் பைப் துண்டிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதனை சரி செய்து சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக சம்பவத்தன்று பட்ட பகலில் ஆட்டோவில் வந்த இருவர் பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளை போல சுற்றி திரிந்தபடி நோட்ட மிட்டுள்ளனர். பின்னர் அந்த கட்டிட வளாகத்திற்குள் இருந்த பல் மருத்துவமனையின் ஏ/சி அவுட்டோர் யூனிட்டை மெக்கானிக்குகள் போல கழற்றி தங்களது ஆட்டோவில் ஏற்றிச்சென்றுள்ளனர். முன்னதாக மருத்துவமனைக்குள் ஏசி காற்று வருவது தடைபட்டு போனதால் வெளியே வந்து அவுட்டோர் யூனிட்டை பார்த்துள்ளனர். அங்கு அதனை காணவில்லை. அங்கிருந்தவர்கள் இருவர் வந்து அதனை கழட்டி ஆட்டோவில் ஏற்றி செல்வதாக கூறி உள்ளனர். மருத்துவமனை பெண் ஊழியர் ஓடி வந்து ஆட்டோவை மடக்குவதற்குள்ளாக அந்த பகல் கொள்ளையர்கள் ஆட்டோவில் தப்பி விட்டனர் இதையடுத்து சிசிடிவி காட்சிகளுடன் மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மதுரவாயல் பல்லவன் நகர் சுற்றுப்புற பகுதியில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வீடு மற்றும் கடைகளில் வெளிப்புறத்தில் உள்ள ஏசி அவுட்டோர் யூனிட்களை கழட்டி களவாடிச்சென்றதாக கூறப்படும் நிலையில் ஒரு சிலரது புகார் மீது மட்டுமே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாருக்கு திடீர் தலைவலியாக மாறியுள்ள இந்த பகல் கொள்ளையர்களை ஆட்டோவின் பதிவெண்ணை கொண்டு வலை வீசி தேடிவருகின்றனர்.