தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் பெண்ணை கொலை செய்து, அவரது சடலத்துடன் 3 நாட்களாக வீட்டில் தங்கியிருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அப்துல் ரகுமான் என்ற அந்த நபருக்கும் பெரியகுளத்தைச் சேர்ந்த அம்சவல்லிக்கும் இடையே தவறான தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பு அப்துல் ரகுமானின் வீட்டுக்குச் சென்ற அம்சவல்லி, அவரிடம் 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் அவர் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு அப்துல்ரகுமான் அம்சவல்லியைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சுவற்றில் மோதி மயங்கிய அம்சவல்லியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்து உடலை மூட்டை கட்டிய அப்துல் ரகுமான், மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் சடலத்துடன் வீட்டிலேயே முடங்கியுள்ளார். பூட்டியிருக்கும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.