காவல்துறையினர் செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியது தொடர்பாக புகார் மனு.. சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள சென்னை பெருநகர காவல் அலுவலகத்தில் நவீன் என்பவர் காவல்துறையினர் செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியது தொடர்பாக புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், நவீன் என்பவர் சென்ட்ரல் நோக்கி வேலை தொடர்பாக சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு சொந்தமான வாகனத்தை இயக்கிய காவலர் ஒருவர், செல்போன் பேசியவாறு சட்டத்தை மீறி வாகனத்தை இயக்கியுள்ளார். உடனே நவீன் தனது செல்போனில் அதை வீடியோ எடுத்துள்ளார். இதனை அடுத்து, நவீன் அந்த வீடியோவை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் ஆணையரகத்திற்கு வாட்சப் மூலமாக குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து நவீன் அளித்த புகாரின் பேரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் இருந்து எந்தவித பதிலும் பெறப்படவில்லை. இதனை தொடர்ந்து, நவீன் சென்னை பெருநகர காவல் ஆணைய அலுவலகத்திற்கு சென்று, போக்குவரத்து காவல்துறையிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி, செல்போனில் பேசியவாறு வாகனத்தை இயக்கிய காவலர் ஜானகிராமன் என்பவர் மீது, அபராதம் விதித்து அதற்கான ரசீதை நவீனுக்கு அனுப்பி உள்ளார்கள். ஆனால், இதற்குப்பிறகுதான் “எங்க டிபார்ட்மெண்ட் ஆளையே வீடியோ எடுத்து எங்களுக்கு புகார் அனுப்புறியா? உனக்கு ஒரு பாயாசத்தை போட்டுட வேண்டியதுதான்” என்கிற ரேஞ்சுக்கு யோசித்த போக்குவரத்து காவல்துறையினர் டிவிஸ்ட் அடித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்கள். அதாவது, சமூக அவலங்களைக் கண்டு பொங்கி எழுந்து புகார் கொடுக்கும் நவீன், “இன்றைய பொழுதை வெற்றிகரமாக செயல்படுத்தி விட்டோம். போலீஸையே போலீஸிடம் மாட்டிவிட்டுவிட்டோம். பொதுமக்களுக்கு ஒரு சட்டம் போலீஸுக்கு ஒரு சட்டமா? நீதிடா, நேர்மைடா” என கண்கள் பணித்து, இதயம் குளிர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட நவீனின் செல்போனுக்கு, “தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி” என்பதுபோல் இரண்டு மெசேஜ்கள் வந்துள்ளன. அதாவது, நவீனின் இருசக்கர வாகன எண்ணின் மீது, இரண்டு வழக்குகள், இரண்டு நாட்களுக்கு முன்பே பதிவு செய்ததைப் போல குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் மிரண்டு போன நவீன், காவல் துறை மீது புகார் புகார் அளித்த காரணத்தினால், தன் மீது வீணாக அபராதம் விதித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். காவல் துறையை சார்ந்தவர்கள் மீது புகார் தெரிவிக்கும் பொதுமக்கள் மீதே, காவல் துறை அபராதம் விதித்து இருக்கும் சம்பவம், காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கும் ஒரு சூழ்நிலை உருவாகிவிடும் என சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். போலீஸுக்கு எதிராக கருத்து தெரிவித்த அந்த சமூக செயற்பாட்டாளர்கள் யாராக இருப்பார்கள்? அவர்களது செல்போன் எண்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கும் ஏதாவது அபாரதம் அனுப்பலாமா? என யோசித்துக்கொண்டிருக்காமல், அந்த சட்டத்தை மீறி வாகனம் ஓட்டிய காவலருக்காக, சட்டத்தை மீறி அபராதம் அனுப்பிய காவலர்கள் யார் யார்? என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.